மனிதனுக்கு ஆறு அறிவு என்கிறோம். விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்கிறோம் இருந்தாலும் மிருகங்களிடமிருந்து மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய உண்டு.
முதல் பாடம்
விலங்குகளுக்குப் பயம் என்பது மிகவும் குறைவு. மனிதன் எதற்கெடுத்தாலும் பயப்படுகின்றான். நடந்ததை நினைத்துப் பயப்படுகிறான். நடக்கப்போவதை நினைத்துப் பயப்படுகறான். மற்றவர்களைப் பார்த்து பயப்படுகிறான். மரணத்தைப் பார்த்துப் பயப்படுகிறான். ஆனால்.. விலங்குகள் அப்படி இல்லை. தங்கள் உயிருக்கு ஆபத்து வருமோ என்ற நிலையில்தான் விலங்குகள் பயப்படுகின்றன. ஆபத்து சூழ்நிலை விலகியவுடன் பயமும் விலகிவிடுகிறது. அதன் பிறகு கவலைப்படாமல் எப்போதும் போல வாழ ஆரம்பித்திவிடுகின்றன.
இரண்டாவது பாடம்
விலங்குகள் தோல்வியைக் கண்டு பயப்படுவதில்லை. மனிதன் அப்படியில்லை. தவறவிட்ட பேருந்துக்காகத் தலையில் கையை வைத்துக் கொண்டு வருந்துகின்றவர்கள் உண்டு. பரிட்சையில் தோல்வியா? கவலை! தேர்தலில் தோல்வியா? கவலை! ஏதாவது ஒரு வாய்ப்பு கைநழுவிப் போய்விடுகிறதா? உடனே கவலை!. ஒரு பூனை எலியைத் துரத்துகிறது. அந்த எலி சாமாத்தியமாக ஒரு வலைக்குள் புகுந்து தப்பித்துவிடுகிறது. அதற்காக அந்தப் பூனை ஐயோ.. ஏமாந்து போனோமே! என்று அழ ஆரம்பித்துவிடுவதில்லை போகிறவர்கள் வருகிறவர்களிடமெல்லாம் அதைச் சொல்லிப் புலம்புவத்தில்லை.
மூன்றாவது பாடம்
இது ஒரு வியப்பான செய்திதான். விலங்குகள் அவற்றின் குட்டிகளுக்கு ஆரம்பகாலத்தில் உணவு கொண்டு வந்து கொடுக்கின்றன. குட்டி கொஞ்சம் வளர்ந்த பிறகு எப்படி வேட்டையாடுவது? எப்படி நீந்துவது? எப்படி ஓடுவது? என்பதையெல்லாம் கற்றுக் கொடுக்கின்றன. அதன் பிறகு குட்டிகள் தாமாகவே பிழைத்துக் கொள்ளட்டும் என்று முடிவு செய்து அவற்றைத் தனியே விட்டுவிடுகின்றன.
அதன் பிறகு குட்டிகளைத் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. குட்டிகளும் தனித்துப் போராடி வாழ்ந்து காட்டும். மனிதன் அப்படியில்லை. மகனையும் விடமாட்டான். பேரனையும் விடமாட்டான்! அப்படிச்செய்... இப்படிச்செய்.. என்று ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பான். கடைசி வரை அவர்கள் கூடவே இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவான்.
உனக்கு அனுபவம் பத்தாது. பெரியவங்க சொல்றதைக் கேள் என்பான். இப்படியாக அடுத்த தலைமுறையின் சுயமான வளர்ச்சிக்கும் முயற்சிக்கும் முட்டுக்கட்டைப் போடுவது மனிதனின் இயல்பு.
நான்காவது பாடம்
விலங்குகள் எதிர்காலத்தை நினைத்து அஞ்சுவதில்லை. நாளைக்கு நல்லபடியாக விடியவேண்டுமே என்ற கவலை நமக்குத்தான். எதிர்காலம்... அடுத்த தலைமுறை... இப்படிக் கற்பனை பண்ணிப் பயந்று அதற்காக சேர்த்துவைக்க வேண்டுமே என்பதற்காக இன்றைக்குப் படாதபாடுபடுகிறவன் மனிதன்.
சிங்கம் பசி எடுத்த பிறகுதான் இரை தேடவே ஆரம்பிக்கிறது. அவ்வளவு தன்னம்பிக்கை. பறவைகள் மழைக்காலம் வந்து விட்டால் தேவைப்படுமே என்பதற்காக மட்டும் கொஞ்சம் சேர்த்து வைப்பதுண்டு. எப்போவோ வரப்போகிற தேவையை எண்ணி இப்பவே நடுங்குகிற பழக்கம் விலங்குகளிடம் இல்லை. நிகழ்காலத்தில் வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்று பெரிய ஞானிகள் நமக்கு புத்தி சொல்கிறார்கள்.
விலங்குகள் ஏற்கனவே அப்படித்தான் வாழ்ந்து கொள்டிருக்கின்றன.
ஐந்தாவது பாடம்.
விலங்குகள் அவையும் வாழும். அடுத்ததையும் வாழுவிடும். எலியும்-பூனையும், சிங்கமும்-மானும் எதிரிகள்தான், இருந்தாலும் தேவைக்கு மீறிப் பசிக்கு அதிகமாக எந்த விலங்கையும் அவை கொல்வதில்லை. காடுகளில் எல்லா விலங்குகளும் வாழமுடிவதற்கு இந்த சகிப்புத் தன்மைதான் காரணம். ஆக இவையெல்லாம் நாம் விலங்குகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்.
0 comments:
Post a Comment