ஆன்மீகம் மாறாத உண்மைகளைப் பற்றிப் பேசுகிறதே! அப்படி என்றால் அறிவும் அறிவியலும் ஆன்மீகத்துக்குப் பகையா?
நமது அறிவு, அறிவியல், தொழில்நுட்பப் பயன்பாடு, வாழ்க்கைத்தரம் எல்லாமே வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மிக மிக வேகமாகவே வளர்ந்து வருகிறது.
ஆனால் மனித இயல்பு அவ்வளவு விரைவாக மாறவில்லை என்பதை நம்மால் மறுக்க முடியாது. மனித சுபாவம், பொறாமை, பேராசை, மற்றவர்களை அடிமைப்படுத்தும் ஆர்வம் இவையெல்லாம் மறையவில்லை! குறையவில்லை.
3000 வருடங்களுக்கு முன்னால் உலகெங்கும் மன்னராட்சி மலர்ந்தது. ஆண்டான், அடிமை என்ற மனப்போக்கும் வளர்ந்தது. ஆடு மாடுகளைப்போல் மனிதர்களும் விலைபேசி விற்கப்பட்டார்கள். சாதியம், பெண்ணடிமைத்தனங்கள் போன்ற சமூக அநீதிகளும் போர்களும், கொள்ளை, கொலைகளும் பெருகின.
இந்தச் சமயத்தில் மனித இனம் உய்வு பெற இறைநம்பிக்கை வளர்க்கப்பட்டது. எல்லா ஆற்றல்களும், எல்லா நன்மைத்தனங்களும் நிறைந்த ஒரு பரம்பொருளை நாம் நம்பி வழிபடுவதன் பயன் உணரப்பட்டது. உணர்த்தப்பட்டது! உலகின் பல்வேறு பகுதிகளில் புத்த பெருமான், கிருஷ்ண பெருமான், இயேசு பெருமான், நபிகள் நாயகம் போன்றோர் ஆன்மிக நெறிகளை வளர்த்தனர்.
தொடங்கப்பட்ட இடம், காலத்தைப் பொறுத்துச் சமயங்கள் வேறுபடலாம். ஆனால் எல்லாச் சமயங்களும் ஒரே ஆன்மீக நெறியைத் தான் வலியுறுத்துகின்றன.
ஆன்மிக நெறியின் மூன்று கூறுகளைக் காண்போம்.
1. கடவுள், உண்மை, நீதி. நேர்மை போன்ற நற்பண்புகள் ஆகியன எப்போதும் வெல்லும் என்ற நம்பிக்கை.
2. தனி மனித சுயக் கட்டுப்பாடு ஒழுக்கமான செயல்கள் (Self Discipline)
3. உயிர்கள் அனைத்தையும் சமமாகப் பாவிக்கும் மனித நேயம், அன்பு, சகோதரத்துவம்.
நல்ல சமுதாய வளர்ச்சிக்கு இந்த ஆன்மீகப் பண்புகள் நிச்சயம் பயன்படும். இந்த உண்மைகள் என்றென்றும் நிலையானவை. மாறாதவை, அழியாதவை.
ஒவ்வொரு சமய நூலும் இந்த மாறாத ஆன்மீக நெறியைத்தான் மீண்டும் மீண்டும் வெவ்வேறு வழிகளில் வலியுறுத்துகின்றன.
நவீன உளவியல், பழகும் பாங்கியல் ஆய்வுகள்கூட இந்த ஆன்மீகப் பயிற்சிகள் தனிமனித நலத்துக்கும் சமூக நலத்துக்கும் பெரிதும் பயன்படுவதை மறுக்கவில்லை.
புத்தரும், இயேசுவும், நபிகளும் சமயத்தை ஒரு சமூக இயக்கமாகத்தான் வளர்க்க முயன்றார்கள். காலப் போக்கில் இவை சமயங்களாக நிறுவன விதிமுறைகளுக்குள் இறுகிவிட்டன. முடியாட்சியும் சமயமும் பல நேரத்தில் கை சேர்த்துக் கொண்டன. அதிகார அமைப்புகளும் ஆண்டான் அடிமை வேறுபாடுகளும் மீண்டும் தலைதூக்கின. மனித நேயத்தை வலியுறுத்தப் பிறந்த சமயங்களே தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டன.
"சமய நிறுவனங்கள் சொல்வனயாவும் விவாதத்துக்கு அப்பாற்பட்ட உண்மைகள், மாறாத உண்மைகள்" என்கிற ஒரு சிந்தனைப் போக்கு காலப்போக்கில் உருவானது. இதுதான் மூடநம்பிக்கைகள் வளரக் காரணமாக அமைந்தது.
பிறப்பிலிருந்து இறப்புவரை எத்தனை எத்தனை விதமான மூடநம்பிக்கைகள்... ஏமாற்றுவேலைகள்... வறுமையையும் சமூக அநீதிகளையும் நியாயப்படுத்துகின்ற மூட நம்பிக்கைகள்...
சமயத்தின் பெயரால் மனிதர்களை ஏமாற்றுவதும் எளிதானது! தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பது பழமொழி. இப்போது தாடி வைத்தகனெல்லாம் போலிச்சாமியாராகும் வாய்ப்பு இருக்கிறது. காவல்துறையே எத்தனை முறை அம்பலப்படுத்திய பிறகும் இப்படிப்பட்ட போலிகளுக்கு இன்னும் மவுசு குறையவில்லை!
இவ்வகை மூடநம்பிக்கைகளுக்கு எதிரானதுதான் பகுத்தறிவு இயக்கங்கள். வளர்ந்த நாடுகளில் கல்வியும் அறிவும் வளர வளர இந்த வகை மூட நம்பிக்கைகள் குறைந்து வருகின்றன.
நம் நாட்டிலும்கூட கல்வி அறிவும் பகுத்தறிவுச் சிந்தனையும் வளர்ந்த பகுதிகளில் மூடநம்பிக்கைகளும் குறைந்து வருவதைக் காணலாம்.
எனவே, ஆன்மீகம் நம்மை நல்வழிப்படுத்தி வந்திருக்கிறது. நல்வழிப்படுத்த நம்மோடு இருக்க வேண்டும். நம்மோடு இருக்கும் அதில் சந்தேகம் ஏதும் இல்லை.
ஆனால் நமது ஆன்மீகம் சமய எல்லைகளைக் கடந்த புதிய விரிந்த மனித நேய ஆன்மீகமாக மலர வேண்டும்.
எல்லாச் சமயத்தவரும் அவரவர் வழிபாட்டு நெறிகளையும் தனிமனிதக் கட்டுப்பாடு நெறிகளையும் பின்பற்றும் வாய்ப்பு இருக்க வேண்டும். ஆனால் மனித நேயம் எல்லாச் சமயத்தவரையும், ஏன் சமய நம்பிக்கை இல்லாதவரையும்கூட ஒன்றுபடுத்த வேண்டும்.
சமய நம்பிக்கைகள் அறிவுத் தேடல்களுக்கும், அறிவியல் பார்வைக்கும் குறுக்கே நிற்கக்கூடாது. பகுத்தறிவுக்குப் பொருந்தாத தவறான நம்பிக்கைகளை விட்டொழிக்கச் சமய நம்பிக்கையுடைய நாம் முயலவேண்டும்.
உலகின் மாபெறும் அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு ஆன்மீகவாதிதான்! எனவே ஆன்மீகத்துக்கும் பகுத்தறிவுக்கும் பகை தேவையில்லை. சமுதாய வளர்ச்சிக்கு இவை இரண்டும் முரண்படாமல் இயைந்த ஓர் ஆன்மீகப் பகுத்தறிவுப் பாதை தேவை.
0 comments:
Post a Comment