படைப்பாற்றல் மிகச்சில மேதைகளிடம் மட்டுமே காணப்படும் பண்பா? நாம் ஒவ்‍வொருவரும் படைப்பாளிகளாக முடியுமா?
புதுமையையும், மாறுபாடான சூழலையும் விரும்பும் மனநிலை நம் ஒவ்‍வொருவரிடமும் இருக்கிறது. புது வகையான உணவு, மாறுபட்ட ஒரு சுற்றுலா மையம், மாறுபட்ட இசை, பாடல், கோயில், குளம் இப்படி எல்லாமே நமக்குப் பிடிக்கும். அரைத்த மாவையே அரைப்பதை நாம் விரும்புவதில்லை.
நம் ஒவ்வொருவரின் ரசனைக்கும் ஏற்ற மாறுபாடான மனிதர்கள், வாய்ப்புகள், இயற்கைச் சூழ்நிலைகள் எல்லாமே இந்தப் பூமியில் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு புதுமையன்று, பல புதுமைகள் மலர்கின்றன! வித்தியாசமான இச்சூழ்நிலையை, இயற்கை தரும் கொடை என்று சிலர் சொல்கிறார்கள். இறைவனின் படைப்பாற்றல் ‍‍என்று வேறு சிலர் சொல்கிறார்கள்.wall image
நம்மைப் பொறுத்தவரை இரண்டு பார்வைகளும் ஒன்றுதான். ஒன்று படைப்பைப் போற்றுகிறது. மற்றொன்று படைப்புக்கான சில காரணங்களைப் போற்றுகிறது.
ஆனால் ப‍டைப்பாற்றல் இறைவனுக்கு மட்டும்தான் சொந்தமா? இறைவனைத் தவிர வேறுயாரும் புதியவற்றைப் படைப்பதில்லையா?
இப்படி யாரும் கருதுவதில்லை. நம்மில் பலரும் ஒவ்வொரு துறையிலும் ஒரு சில மேதாவிகள் (Genius) படைப்பாற்றல் மிகுந்தவர்களாக (Highly Creative) இருப்பதைக் காண்கிறோம்.
இசையில் ஓர் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்...
நடிப்பில் ஒரு சிவாஜி கணேசன், கமலஹாசன்...
ஓவியத்தில் ஒரு ஹூசேன்...
கிரிக்கெட்டில் ஒரு தெண்டுல்கர்...
சதுரங்கத்தில் ஒர் ஆனந்த்...
இப்படிச் சிலரை மட்டும் நாம் படைப்பாளிகள், மேதைகள் என்று ஏற்றுக்கொள்கிறோம்! ஆனால் இவர்கள் மட்டும்தான் படைப்பாளிகளா? நம்மைப்போன்ற மற்றவர்கள் எல்லாம் படைப்பாற்றலே இல்லாதவர்களா?
இதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நம் ஒவ்வொருவருக்குள்ளேயும் இறைப்பண்பு நிறைந்திருக்கிறது. இறைவனின் ஆற்றல் நம்மிடம் குறைந்த ‍அளவில் உள்ளது. நாம் அதனை வளர்ப்பது... நிறைவு படுத்துவது.. அ‍னைத்தும் நமது முயற்சியைப் பொறுத்தது.
புதிது புதிதாகச் சிந்திப்பதும் வியப்பூட்டும் வகையில் வித்தியாசமாகச் செயல்படுவதும்கூட ஓர் இறைப்பண்புதான்! அந்தப் பண்பும் நம் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் ஒளிந்து கிடக்கிறது. ஆம்! நாம் ஒவ்வொருவரும் உண்மையில் படைப்பாளிதான். படைப்பாற்றல் (Creativity)  என்பதற்கு தன்னிகர் இல்லாத, மற்றவர்களால் எட்டவே முடியாத திறமை (Un-attainable excellence) என்று நாம் பொருள் கொள்ளத் தேவையில்லை! இது நம்மை நாமே குறைவாக மதிப்பிட வைக்கும்.
நாம் செய்யும் எந்த ஒரு பணியையும், மற்றவர்கள் விரும்பி ஏற்கும் வகையில் இன்னும் கொஞ்சம் புதுமையாக, இன்னும் கொஞ்சம் வித்தியாசமாகச் செய்யலாம். அதுதான் படைப்பாற்றல். இத்தகைய படைப்பாற்றல் நம்மைச்சுற்றிப் பலரிடம் இருக்கிறது. பல்வேறு பணிகளிலும் இது வெளிப்படுகிறது.
உங்கள் பகுதியில் பல்வேறு பலசரக்குக் கடைகள் இருக்கலாம்! ஆனால் ஒரே ஒரு கடை மட்டும் சக்கைப் ‍போடு போடும்...
ஒரே ஒரு ஜவுளிக்கடை வெற்றிக்கொடி கட்டிப் பறக்கும்...
ஒரே ஒரு உணவு விடுதி பலரையும் கவரும்..
‍அதெல்லாம் ஒரு ராசி என்று சொல்லிவிட்டு நம் போக்கில் போய்க்கொண்டிருப்பது ஏமாளித்தனம்.
வெற்றி பெறும் ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு புதுப்புது உத்திகளைக் கையாள்கிறது! வெவ்வேறு வகைகளில் பொதுமக்கள் விரும்புவதை, விரும்பும் வகையில் வாரிக்கொடுக்கிறது. நம்மாலும் கையாளக்கூடிய எளிய உத்திகளாக அவை இருக்கும். நம்மாலும் அந்த உத்திகளைக் கற்றுக் கொள்ள முடியும். புதுப்புது உத்திகளை நாமே உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.
படைப்பாற்றலை மிகப்பெரிய நிறுவனங்கள் மட்டும்தான் பயன்படுத்துகின்றன என்று நினைத்துவிடாதீர்கள்!
பல சின்னஞ்சிறு தனிமனிதர்களிடமும் இந்தப் படைப்பாற்றலைப் பார்க்கலாம். தெருவெல்லாம் நம்மூரில் டீக்கடைதான். ஒரு கடையில் கூட்டம் அலைமோதும்! அடுத்த கடையில் ஈ மொய்க்கும்!
ஒரே ஒரு ஆசிரியரை மட்டும் மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும்! ஒ‍ரே ஒரு சமையல்காரர்!! ஒரே ஒரு தையல்காரர்!!
ஒரே ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட வித்தியாசமான வெற்றி மனிதர்களை நமது பகுதியில் நம்மைச் சுற்றி நாமே அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
நாம் எந்தத் துறையில் பணி செய்கிறோமா அந்தத் துறையிலும் அத்தகைய படைப்பாளிகள் இருக்கக்கூடும். ஏன்? நாமே நமது முயற்சிகளில், சில நேரங்களில் இப்படிச் செயல்பட்டு வெற்றி ‍பெற்றிருக்க முடியும்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமக்குள்ளே ஒளிந்து கிடக்கும் இந்தப் படைப்பாற்ற‍லை வளர்த்துக் கொள்வதுதான்.
கொஞ்சம் வித்தியாசமாகச் சிந்திக்க வேண்டியதுதான்! மற்றவர்கள் விரும்பும் வகையில் அதைச் செயல்படுத்த ‍வேண்டியதுதான்! படைப்பாற்றல் என்பது இவ்வளவுதான்!
மீண்டும் மீண்டும் இப்படியே சிந்தித்துச் செயல்படுகின்ற செயல்திறனை வளர்த்துக் கொண்டால் நாமே ஒரு பெரிய படைப்பாளி ஆகிவிடுவோம்.

0 comments:

Post a Comment