கல்வி ஒரு கடைச்சரக்கா? அல்லது சந்தைப்பொருளா? மாற்றுவது யார் பொறுப்பு?
உலகெங்கும் பெரும்பாலான மனிதர்கள் வேளாண்மையையும் உடல் உழைப்பையும் நம்பித்தான் வாழ்ந்தார்கள். கல்வி மிகச் சிலருடைய ஏகபோகச் சொத்தாகத்தான் இருந்தது. நம் நாட்டிலும் மேலை நாட்டினர் வரும்வரை கல்வி என்பது ஒரு சில குறிப்பிட்ட இனத்தவரின் தனிச்சொத்தாகத்தான் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்த பிறகும்கூட அனைவருக்கும் கல்வி வழங்கும் முயற்சி தொடங்கவில்லை.
பல தலைமுறைகளாகக் கல்வி கற்று வந்தவர்கள் ஆங்கிலேய ஆட்சிக்குத் தேவையான எல்லா அரசுப் பணிகளிலும் இடம் பிடித்துக் கொண்டார்கள். மற்றவர்கள் கல்வி பற்றி ஆங்கிலேய அரசும் கவலைப்படவில்லை.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்கூட நம் நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை மொத்தத்தில் 10% சதவிதம்தான்.
ஆனால் கடந்த நூறு ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி என்ற குறிக்கோளை நோக்கி நாம் வெகுவாக முன்னேறி இருக்கிறோம்.
கிறித்துவ நிறுவனங்கள் பட்டி தொட்டிகளில் எல்லாம் கல்வி நிறுவனங்களையும் சுகாதார மையங்களையும் தொடங்கின. இவை ஆல விருட்சமாகி இன்னும் தொடர்ந்து வளர்கின்றன. சாதிப் பாகுபாடில்லாத கல்வி கிட்டியது.
1920களில் பிற்பட்ட சமூகத்தவருக்கும் வாய்ப்புகள் பெருகும் வகையில் இடஒதுக்கீடு முறை நடைமுறைக்கு வந்தது. பல நூற்றாண்டுகள் கல்வியில் பின்தங்கிக் கிடந்த சமூகங்கள் முன்னேற்றம் கண்டன.
1950களில் காமராஜர் அரசுப் பள்ளிகளைப் பட்டிதொட்டிகளுக்கெல்லாம் கொண்டு சென்றார். பல தாளாளர்கள் கல்வி நிலையங்களுக்கு இடம் கட்டடம் என்று வசதிகள் செய்து கொடுத்தார்கள். கல்வி ஒரு தொண்டாக வளர்ந்தது. அரசே பல உயர்கல்வி நிறுவனங்களையும் உருவாக்கியது.
1980களில் கல்வி பயில விரும்புவோரின் எண்ணிக்கை பெருகியது. அரசு போதிய நிதியை ஒதுக்கி அனைவருக்கம் கல்வி வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. தனியார் நிறுவனங்கள் வளர்ந்தன அரசு கல்விக் கட்டணங்களையும், இட ஒதுக்கீட்டையும் உயர்கல்வித்துறையில் செயல்படுத்தியது. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற சமுதாயக் கடமை ஒரளவு நிலை நாட்டப்பட்டது.
இன்று இந்நிலை மாறிக் கல்வித்துறையே ஒரு சந்தைக் கடையாக மாறிக்கொண்டிருக்கிறது.
நர்சரிப் பள்ளிகள் புற்றீசல்களாக முளைத்து ஏழைகளின் பணத்தைச் சுரண்டுகின்றன.
அரசுத்துறையில் உள்ள பள்ளிகள், ஆசிரியர், பெற்றோர், அரசு இயந்திரம் ஆகியவற்றின் மெத்தனப் போக்கால் பின்தள்ளப்பட்டு விட்டன.
போட்டிகளைச் சமாளித்து வளரும் மிகச்சில தனியார் பள்ளிகள் ஏராளமாகக் கட்டணம் வசூலிக்கின்றன. ஏழைகளும் பின்தங்கியவர்களும் இந்தப் பள்ளிகளுக்குள் நுழையவே முடியாத நிலை.
ஆயிரக்கணக்கில் பணம் கட்டி 'டியூசன்' போக வேண்டிய நிலை. கடுமையாகி வரும் பாடத்திட்டத்தையும் நுழைவுத் தேர்வையும் சந்திக்க முடியாமல் பல நகர்ப்புற ஏழை மாணவர்கள் பின்தங்கிப் போகின்றனர்.
இதையும் தாண்டி உயர்கல்விக்குப் போனால், ஆண்டுக்கு 80,000 ரூபாய் வரை அரசே நிர்ணயித்த கட்டணச் செலவுகள்! அதற்குமேல் நன்கொடை... இது போதாதாம்! தனியார் கல்வி நிறுவனங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணம் வசூலிக்கலாம்... இடஒதுக்கீடும் சட்டப்படி செல்லாது... என்கிறது உச்ச நீதிமன்றம்...
இது அறிவு யுகம்! எல்லாத் தரப்பினரும் இதில் போதிய அக்கறை காட்டவேண்டும்.
மாணவர்கள் இன்றைய போட்டிச் சூழலை நன்றாக உணர்ந்து, இளமையிலேயே முடிந்தவரை தங்களை அறிவுத்தரத்தில் உயர்த்திக்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் கல்விக் கடமையை உணரவேண்டும். பணம் பண்ண வேண்டியதுதான். ஆனால் பிள்ளைகளுக்கு உரிய கல்வியை பொறுப்போடும் கனிவோடும் நாம் வழங்கியாக வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடத்தையைக் கவனிக்க வேண்டும். பள்ளிகளையும் கவனிக்க வேண்டும்.
தனியார் கல்வி நிறுவனங்கள் மிகப் பொறுப்போடு செயல்பட வேண்டிய நேரம் இது. கல்வி ஒரு சந்தை அன்று! சமூகத் தொண்டு! அதை வெறும் ஏமாற்றுச் சத்தையாக மாற்ற நினைக்கும் நிறுவனங்கள் காலப்போக்கில் கடுமையாக விளைவுகளைச் சந்திக்க நேரும்!
உண்மையில் நாம் ஒவ்வொருவருமே கல்வித்துறை வளர ஏதாவது செய்ய வேண்டும். சொல்லித் தரலாம்! இளைஞர்களுக்கு ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தலாம். ஒரு சில ஏழைப் பிள்ளைகளின் படிப்புக்கு உதவலாம்! வசதியுள்ளவர்கள் கோயிலுக்குச் செலவிடும் பணத்தைக்கூட, ஏழைக் குழந்தைகளை வளர்த்தெடுக்கப் பயன்படுத்தலாம்.
அரசியல்வாதிகளும் தங்கள் கடமையை உணர வேண்டும். பல புதிய தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் நலத்துக்காக சமூக நலத்தைக் காற்றில் பறக்கவிட்டு விடக்கூடாது.
ஒரு சமுதாயம் எந்த அளவுக்கு விழிப்பாய் இருக்கிறதோ, அந்த அளவுக்குத்தான் அது வளரும். அது தேர்வு செய்யும் குடியாட்சியும் அமையும்.
கல்வி கற்பதில் அனைவர்க்கும் சம வாய்ப்பை உருவாக்கும் திசையிலிருந்து கடந்த சில வருடங்களாக மிகவும் வேகமாக விலகிச் சென்று கொண்டிருக்கிறோம். கல்வி ஒரு சமூகக் கொடையாக எப்போதும் இருக்கவேண்டும். சமூகத்தின் ஒவ்வோர் அங்கத்தினருக்கும் இதை நிலைநாட்டும் பொறுப்பு இருக்கிறது.
0 comments:
Post a Comment